பார்க்கிங்..!

 



இந்தப்படம் வீடு வாடகைக்கு விடும் நபர்கள் பார்த்துத் திருந்த வேண்டிய படம்..! இருவீடுகளை வாடகைக்கு கொடுக்கும்போது சரியான முறையில் பார்க்கிங் வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். இல்லை என்றால், வாகனம் இல்லாதவர்களுக்குத் தான் வீடு என்று சொல்லி, கொடுக்க வேண்டும்.

இரு சாதரணமான குடும்பங்கள் புறத்தாக்கங்கள் மூலம் நடக்கும் சூழலுக்குள் மாட்டுவதைப் பார்க்கும் போது, “வசதிகள் மனிதர்களுக்கு நன்மைகளைக் காட்டிலும் தீமைகளை ஏற்படுத்துகின்றன..” என்ற கோட்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய சூழலுக்கு, உலகம் தள்ளப்படுவது புரிகின்றது..!

இளைஞர்கள் என்றால் புரிந்துணர்வு இல்லாமல் ரவுடிகள் போல் அலைவதும், வயதுகள் போனாலும் புத்தி இல்லாமல் இளைஞர்களுக்கு சவால்விட்டுக்கொண்டு திரியும், அறிவிலி ஜென்மங்கள் போல் வாழ்வதும், அந்த நபர்களுடன் கூடவாழும் மனிதர்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது..!

தமக்குத் தான்  கோபம் சொந்தமானது என்பது போல நடப்பது முட்டாள் தனங்களில் உச்சமானது. அதனால் வரும் விளைவுகள், அந்த நபர்களைத் தாண்டி குடும்ப உறுப்பினர்களும் மாட்டுவது கொடுமையானது.

பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கர்ப்பிணியாக இருக்கும் மனைவி மற்றும் அவளது கணவரும் மேல் மாடியில் குடிவர, கீழே ஒரே மகளுடன் இருக்கும் வயதான கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்படும் உறவும், உரசலும் அதனூடான வன்மமும் அதற்குள் இருக்கும் மனிதநேயமும் சேர்த்து, திரைப்படத்தை ஒரு சுவையான, போரடிக்காக படமாக மாற்றியுள்ளது..!

எனக்குப் படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை நடக்கும் சம்பவங்கள் அறிவிலித்தனத்தின்  வெளிப்பாடுகள் என்றாலும், பூமியில் அதிகம் இவ்வாறான மனிதர்களே இருக்கின்றார்கள்..!  அது தான் உலகம் அமைதியில்லாமல் அல்லோலகல்லோலப் படுகின்றது..! போட்டிபோறாமைகள் எங்கும்  பரந்து வியாபித்துள்ளன. பணத்தால் எதையும் சாதிக்கலாம் என ஒரு கூட்டம் வளர்கின்றது..! நாளை என்ன என்பதை யாரும் அறியமுடியாத நிலையில் இப்படியான முட்டாள்கள் செய்யும் செயல், நிம்மதியாக வாழும்  அல்லது வாழ நினைக்கும் மனிதர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கின்றது.

படத்தில் ஹரிஷ்கல்யான், பாஸ்கர் மற்றும் இந்துஜா என எல்லோரும் சிறப்பாக நடித்து இருந்தார்கள்.

தொழில்நுட்பங்களும் சிறப்பு.  இசையும் நன்றாக இருந்தது. ராம்குமார் பாலகிருஷ்னன் என்ற படத்தின் இயக்குனருக்குப் பாராட்டு..! சின்ன விடயங்களும், சினத்தைக் கூட்டி வாழ்க்கையை சின்னாபின்னமாக்கும் என்பதை அழகாக விளக்கி, இறுதியில் ஒவ்வொருவரும் தமது தவறுகளை உணர்வது போல் காட்டியது, படம் தாண்டிப் பாடமாகப் பார்க்கத் தோன்றுகின்றது.

அனைவரும் பார்க்கக்கூடிய படம்.

 


ஆ.கெ.கோகிலன்

07-04-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!