வேடிக்கை வாழ்வியல்..!

 



ஜோதிடங்கள் சொல்வது ஒன்று..! உண்மையில் நடப்பது வேறோன்று..! பல ஜோதிடர்கள்  கொள்கைகளிலேயே வேறுபடுகின்றார்கள்..! கேட்டால் கணித வேற்றுமைகள் காரணம் என்கின்றார்கள்..!

ஒரு கேள்விக்கு ஒரு விடை தான் வரவேண்டும். அது தான் சரியான கணக்கு..! ஆனால் ஒரு பிரச்சனைக்கு பல தீர்வுகள்..! ஒவ்வொருவர்  ஒவ்வொருமாதிரித் தீர்ப்பை வழங்குகின்றார்கள்..! கேட்டால், இது ராகு, சனி, குரு, சுக்கிரன் என்று சொல்லி மழுப்புகின்றார்கள்..!

உண்மையில் நடக்க வேண்டியது நடந்து தான் ஆகும். ஜோதிடத்தை நம்புவதைவிட, நீங்கள் உங்களை நம்பலாம்..! முயற்சி செய்யுங்கள்..! தோல்வி வந்தாலும் ஒரு பாடம் படித்த அனுபவம் கிடைக்கும்..!

இரு வாரங்களுக்கு முன்னர் என்னை ஏமாற்றிய ஒருவர் இன்று வந்து தலைகுனிந்து நின்றார்..! அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.!. நிறைய அறிவுரைகளைக் கூறி, அவரது நிலையைப் புரிந்து, அனுப்பி வைத்தேன்.

எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள் தான் பிறக்கும் போது..! பின்னர் வாழ்க்கை அவர்களை மாற்றுகின்றது..!

சிலர் தாங்கள் புத்திசாலிகள் என்றோ அல்லது மற்றவர்களை மடையர்கள் என்றோ நினைத்து வாழுகின்றார்கள். உண்மையில் இறைவன் எல்லோருக்கும், நிறைகளையும் குறைகளையும் கொடுத்தே வைத்துள்ளான்..! ஆகவே அவ்வாறு நினைப்பதால் சில சமயம் சில பெருமைகள் கிடைக்கும். அதேபோல், நினையாத பல சந்தர்ப்பங்களில் சிறுமைகளும் வந்துசேரும்..!  கூட்டியும் குறைத்தும் நினைக்கத்தேவையில்லை.  காற்றை எல்லோருக்கும் ஒரே அளவாகவே வழங்கியுள்ளான்..!  அதற்குள் தான் எமது உயிரின் மூச்சும் அடக்கம்..!  நாளை எமது இருப்பை நிச்சயப்படுத்த முடியாத நிலையில் தான் இறைவன் வைத்துள்ளான்..!

எனது நிறுவனத் தங்குமிடத்தில் இருந்து வெளிக்கதவைத் திறந்து வெளியேற இரவு சிரமப்பட்டேன். இருந்தாலும் ஒருவாறு கதவைப் பூட்டிவிட்டு உணவு வாங்கச் சென்றேன். வந்ததும்  கதவைத் திறக்க முனைந்தேன். சாவி உடைந்துவிட்டது..!

பின்னர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உதவியுடன் அலுவலக முன்கதவைத் திறந்து உள்ளே வந்து வழமையான கடமைகளைச் செய்தேன்.

இன்று எனக்கு ராஜயோகம் என ஒரு பேப்பரில் பார்த்தேன். அது என்ன என்று இப்போது புரிகின்றது..? கஷ்டப்படுவதற்கு இன்னோரு பெயர் ராஜயோகம் என்பது தான் போல..!

 

இன்று காலையே ஏசி வேலைசெய்யவில்லை..! அலுவலகத்தில் ஒரு பகுதி மின்சார உபகரணங்கள், ஒரு பகுதி மின்சாரம் இல்லாததால் வேலைசெய்யவில்லை. பின்னர் சிஇபிக்கு சொல்லி, வந்து திருத்தினார்கள்..! மின்சார வெளியறைக்கான சாவி எங்கே என்பது தெரியாமல், தவித்து இறுதியாக பாதுகாப்பு உத்தியோகஸ்தர் அறையில் இருந்து எடுத்தார்கள்.

இன்று பல பிரச்சனைகள் வந்தன..! அவற்றிற்கு என்னால் இயன்ற தீர்வுகளை  வழங்கிப் பெருமூச்சு விட்டேன்.

 

கடந்த சில வாரங்களாக வாட்டியெடுத்த வெயிலைத் துரத்த இயற்கை மழையை அனுப்பியுள்ளது..!

மழை வேறு  தொடர்ந்து  பெய்வதால் காலநிலையில் மாற்றம் வரத்தொடங்கியுள்ளது..!

என்னை அறியாமலே சில விடயங்கள் நடந்து, எனக்கு நன்மையை அளிக்கின்றன..! அதேபோல் நன்மை நடக்கும் என அறிந்து செய்யும் விடயங்களும் எனக்கு மாறி நடக்கின்றன..! ஆனால் ஆச்சரியங்கள் மட்டும் தொடர்கின்றன..! எல்லா நிகழ்வுகளூடாகவும் இறைவனும் இயற்கையும் தெரியாமல் போவதில்லை..!

 

ஆ.கெ.கோகிலன்

14-05-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!