சின்னப்பாட்டியின் மரணச்சடங்கு..!

 


இம்முறை பட்டமளிப்பு விழாவிற்கு வழமையைவிட வேறுவகையில் அதுவும் குறிப்பாக பட்டமளிப்பு விழாவன்று காலையில் கொழும்பு சேரத்திட்டம் போட்டு, அதற்கேற்ப குளு குளு பஸ்ஸை புக்செய்து வைத்திருந்தேன். திடிரென நிலைமை போனமுறை போன்று மாறியது..! அதற்கு ஒரு மரணச்செய்தி காரணமானது..!

பட்டமளிப்பு விழாவில் வழமைபோல் முதலாவது அமர்வு எனது வாசிப்பில் தொடங்கியது..! மேலும் புதிதாக 6வது அமர்விலும் எனக்கான ஒரு வாசிப்பு, இருந்தது. இந்த நிலையில் யாழில் இருந்து துக்கச்செய்தி வந்தது. மனைவியின் சின்ன பாட்டி  இறந்துவிட்டார் என்றும் நாளை எடுப்பதாகவும் இயலுமென்றால் வரும்படியும் கூறினார்கள்.

வீட்டருகில் நடக்கும் சடங்கில் கலந்துகொள்ளாவிட்டால், உறவுகளுக்கு இடையே நல்லாக இருக்காது என்பதால், எனது 6வது அமர்வின் கடமையைச் செய்துவிட்டு, மேலதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திவிட்டு, விடுதிபோய் உடுப்புக்களை மாற்றிக்கொண்டு, குளு குளு பஸ் நிலையம் வந்து 8.00 மணிக்கு, புறப்பட்ட பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். நன்றாக நித்திரை வந்தாலும் பஸ் அவ்வளவு சௌகரிகமாக இருக்கவில்லை. நித்திரையும் கொள்ளமுடியவில்லை. கடும் வெயில் காரணமாக விடுதியிலும், ஏன் வீட்டிலும் நித்திரை கொள்வது சிரமமாக இருந்தது.

ஒருவாறு சமாளித்து வரும்போது, பஸ்ஸில் “மஞ்சுமல்போய்ஸ்..” படம் போட்டார்கள். அதையும் பார்த்து ரசித்துக்கொண்டு வந்தேன். போகும்போது காரை யாழ் நிறுவனத்தில் விட்டுச்சென்றேன். வரும்போது எடுத்துவருவோம் என்ற நிலையில், அது முடியாமல் போய்விட்டது. பின்னர் மரணவீட்டில் கலந்துகொண்டு, எனக்குத் தரப்பட்ட கடமையான அஞ்சலிக்கூட்டத்தை ஒருவாறு தொகுத்து வழங்கியதுடன் அரப்பெண்ணை வைத்து, பூக்கள்  போட்டுப்பந்தம் பிடித்துப் பின்னர் சுடலைசென்று வாய்க்கரிசி போட்டு தகனம் செய்வதை அவர்களுடன் நின்று பார்த்துவிட்டு வந்தேன்.

பின்னர் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட சூடான விருந்திற்கும் இடம் கொடுத்து, நானும் அதில் கலந்து, மாலைவரை கதைத்துப் பின்னர் குளித்து, மதியவுணவை உண்டு உறங்கிவிட்டேன்.

இரவு 8.30 மணிக்குப் பின்னரே மனைவி, பிள்ளையின் குரல்கேட்டு எழுந்து, சின்னப் பாட்டிவீட்டுக்குச்சென்று இரவு உணவையும் எடுத்துச் சிறிது கதைத்துவிட்டு, வீடு வந்தேன்.

பின்னர் வழமைபோல் கணினியில் உட்கார்ந்துவிட்டு, அடுத்தநாள் அதிகாலை 12.00 இற்கு கிட்ட மொட்டைமாடிக்கு சென்று படுத்தேன். அந்த நேரத்தில் கூட வெப்பம் குறையவில்லை..! வெப்ப அலையும் பலரைக்காவு கொள்ளுதோ தெரியவில்லை..! பல மரணச்சடங்குகளுக்கான ஒலிபரப்புக்கள் நடந்தேறின..!

இயற்கை அனுமதித்தால் தான் பூமியில் உயிர்கள் நிம்மதியாக வாழமுடியும். நாமும் இயற்கையை பாதிக்கும் வகையில் நடந்துகொண்டு, அதனால் வரும் பாதிப்பையும் தங்கிக்கொண்டு ஒரு கொடுமையான வாழ்வியலை நோக்கிச் செல்லுவதாகத் தோன்றுகின்றது..! இந்த இடத்தில் விழிப்படைந்து, இயற்கையைப் பாதுகாத்து, மரங்களையும் போதியளவில் வளர்க்க வேண்டும். சூழல் குளிர்ந்தால் தான், நாம் குளிர முடியும்.

 

ஆ.கெ.கோகிலன்

09-05-2024.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!