மாமன்னன்.!

 


மாரி செல்வராஜ் என்கின்ற  கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களின் வாழ்வியலை காட்டும் அற்புத இயக்குனரின் படைப்புக்களான பரியேறும் பெருமாள்,  கர்ணன் என்ற வரசையில் வந்துள்ள படம் தான் மாமன்னன்..!

கொமெடி நடிகர் வடிவேலுவை இப்படியான பாத்திரத்தில் பார்த்திருக்க முடியாது. படத்தை அவ்வளவு தூரம் உயர்த்திப் பிடித்துள்ளார்.  மிகச்சிறப்பான நடிப்பையும், சோகமான ஒரு பாடலையும் பாடி, தான் ஒரு திறமையான கலைஞன் என்பதை நிரூபித்துள்ளார்.

தமிழக முதல்வரின் மகன் உதயநிதியும் சிறப்பான படங்களாக கொடுத்துவருகின்றார். எல்லா திசைகளில் இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், சனாதனத்தை எதிர்த்தாலும், இந்தப்படத்தில்  உயிர்கள் மேல் காட்டும் அன்பையும், ஆணவத்திற்கு எதிராகக் காட்டும் அதிகோபத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி, தானும் ஒரு கலைஞன் என்பதை உணர்த்தியுள்ளார். என்ன தான் அரசியல் பின்புலம் கொண்டாலும், அடாவடி அரசியல் நடாத்தினார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், நியாயமான கருத்துக்களை விதைப்பது, அவர் மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்படுகின்றது..!

கீர்த்தி சுரேஸின் பாத்திரமும் ரசிக்க வைக்கின்றது. ஆகமொத்தம் ஒரு தரமான படத்தைப் பார்த்த திருப்தி, மனதிற்குக் கிடைத்தது.

இந்தப்படத்தில் புதுமையாக பன்றிகளையும், நாய்களையும் வைத்து, சாதியக் கொடுமைகளை எடுத்துச்சொன்ன விதம் நிச்சயம் பல விருதுகளை அள்ளும் என்பது எனது கருத்து.

இறைச்சிக்காகவும், இறைபலிக்காகவும் பன்றியைக் கொல்ல முனைய, அதனை தப்பவிட்டு, கிணற்று நீருக்குள் ஆனந்தக்குளியல் போட, சிறுவர்கள் என்று தெரிந்தும் மன்னிக்க முடியாத மனித மிருகங்கள், கற்களால் அவர்களைக் கொல்ல, ஒரு சிறுவன் தப்பி, தனக்கும், தன்னைப்போன்றவர்களுக்கும் மனவலுவூட்டி, ஆணவத்தில் அலையும் அறிவிலி மனித மிருகங்களை திருத்த முயற்சிக்கும் கதையில் அப்பாவி உயிர்களாக பல பன்றிகளும், நாய்களும் இறப்பது வேதனையாக இருக்கின்றது. அதிலும் தோற்ற நாயைக்கொல்வதும், நாய்களை விட்டு பன்றிகளைக்கொல்வதும், படம் பார்ப்பவர்களுக்கே  கோபம் தீபோல் பத்துகின்றது.

இறைவன் எல்லோரையும் சமமாகப் பார்க்கின்றார் என்பதைப்புரியாமல், வசதி வாய்ப்புகளையும், அறிவையும், அதிகாரத்தையும் வைத்து, ஆணவத்தில் அலையும் அறிவிலி அப்பாவிகளுக்கு நிதர்சனத்தைப் புரிய வைப்பதே கதை..!

நியாயத்திற்கான கோபமும், கொந்தளிப்பும் பார்க்கக்கடினமாக இருந்தாலும் வெல்லும் என்பதும், அநியாயத்திற்காக என்ன நல்லதுகளைச் செய்தாலும், அன்பாகப் பழகுவதுபோல் நடித்தாலும், மன்னிப்புக்கேட்பதுபோல் காலில் விழுந்தாலும்  தோற்றேயாகவேண்டும்..! இது தான் உண்மை.! வரலாறு..! அனைவரும் அனுபவங்களின் ஊடாகவேனும் அறியவேண்டியது..!

 அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள், குறிப்பாக ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் பாடல்கள் என எல்லா துறைகளும் தரமாகப் பணியாற்றியதால் கிடைத்த தரமான படைப்பு இந்தப்படம்..!


ஆ.கெ.கோகிலன்

14-09-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!