கோவில் நாள்..!

 



அண்மைக்காலமாக நான் கோவில் செல்வது குறைந்துவிட்டது..! அதற்கு முதல் காரணம், தமிழர் வரலாறு தொடர்பாகத் தேடும் போது தென்பட்டவைகள்..!  நாமும், சமூகமும் ஏமாற்றப்பட்டதற்கு கோவில் முக்கிய காரணமாக மாற்றப்பட்டுள்ளது என்பது தான்..! இது உண்மையில் ஆதியில் இருந்து வந்ததல்ல..!  இடையில் வந்தவர்களால் வந்தது..!  அதனால் இங்குள்ள மக்களை அடிமைகளாகவும், சிறுபாண்மை மக்கள் மாத்திரம், கடவுளின் தரகர்கள் போலவும் கருதப்பட்டு, வகுக்கப்பட்ட நடைமுறைகள் மக்களிடம் அதிக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, சாதாரண மனிதர்களுடன் பழகத் தடையாக ஏதோ ஒன்று, ஒவ்வொரு மனிதருக்குள்ளும், குறிப்பாக மூளைக்குள் புகுத்தப்பட்டுள்ளது..! தற்போது, கல்வி மற்றும் கலப்புப் புரட்சிகள் ஊடாக  அவை கொஞ்சம் கொஞ்சமாக நொருக்கப்பட்டாலும், இவ்வாறான செயல்களை கோவில்களில் வைத்துச் செய்தது, கடவுளே கோவிலில் இருப்பாரா என்ற ஓர் எண்ணத்தை எனக்குள் ஆழமாக ஏற்படுத்திவிட்டது..!

பூஜைகளையும், சடங்குகளையும் பார்க்கும் போது, வியாபார தேவைகளுக்காக உலகம் மாற்றப்பட்டது போல், இங்கும் நடந்துள்ளது என்பதே என் அறிவிற்கு புலப்படுகின்றது..!

நிம்மதி தரும் கோவிலே வியாபார கூடமானால், ஏன் கோவில் போகவேண்டும்..? என்ற எண்ணம் மாற நீண்ட நாட்கள் எடுக்கும் என்று நம்புகின்றேன்..!

ஆனால் மனைவிக்காகவும், பிள்ளைகளுக்காகவும், உறவுகளுக்காகவும் கோவில் கூட்டிச்செல்வதை  நான் தவிர்க்கவில்லை. கடவுளையும், வழிபாட்டுத்தலங்களையும் நான் தவறாகச் சொல்லவில்லை. அங்கு நடைபெறும், சில செயற்பாடுகளே என்னைத் தவிர்க்கத் தூண்டுகின்றது..!

இன்று, கடைசிச்சனி விரதம் பிடித்து, எள்ளெண்ணை எரித்தோம். அத்துடன்  இன்றைய நாள் என்பது மகாளய அமாவாசை என்பதால்,  அனைத்து முன்னோர்களையும் நினைத்து, மோட்ச அர்ச்சனையும் செய்தோம். அதனால் அவர்கள் அனைவரது ஆசி கிடைக்கும் என்பது ஒரு ஐதீகம்..! அவ்வாறு செய்யாது விட்டால் சபித்து, நமது வாழ்க்கையை நரகமாக்கிவிடுவார்களாம்..!

மனைவியின் ஒன்றுவிட்ட தம்பி, அரபு நாட்டில் இருந்து வந்ததால், அவரும் கூட வருவதால், நானும் சென்றேன். இல்லை என்றால் மனைவியே சென்று இவ்வாறான பூஜைகளைச் செய்வது வழக்கம்..!

மாலை மூத்த மகள் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகக்கேட்க வீட்டிலுள்ள அனைவரும் சென்று, வெற்றிலை மாலை சாத்தி, வழிபட்டு, நூலும் வாங்கிக் கட்டி, வரும்போது அம்மா வீட்டிற்குச் சென்று, தம்பி மகன் நாளை ஹொலசிப் பரீட்சை எழுதுவதால், அவரையும்  வாழ்த்தி, ஆசீர்வதித்துவிட்டு, வீடு வந்தோம்.

இன்றைய நாள், பக்திப் பரவசத்திலே சென்றது..!

 


ஆ.கெ.கோகிலன்

14-10-2023

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!