பல்லு நோவு..!

 

 


இந்த வாரம் தேர்தல் வருவதாலும், சில நாட்கள் அரச லீவுகள் இருப்பதாலும், ஊரில் நிற்கக்கூடியதாக இருந்தது..! பொதுவாக இப்படியான காலத்தில் தான், எனக்கு  வருத்தங்கள் வருவதுண்டு..! ஒரு விரலில் ஏற்பட்ட காயம், தற்போது மேல்தோல் வந்தாலும்,  இன்னும் வலி இருக்கின்றது..! அதேவேளை  சிவப்புச்சின்னக்குளவி கடித்து, வீங்கிய விரலும் கையும் இன்னும் முற்றாக மடிக்கக் கடினமாக இருக்கின்றது..! அதேவேளை சில வாரங்களாக பல்லிலும் வலி ஏற்பட்டு, வருத்தி வருகின்றது..!

இவ்வாறு, பல காரணங்கள் இருப்பதால், இம்முறை மேலும் இருநாட்கள் சுகயீன லீவை சொல்லிவிட்டு, உடலிலுள்ள உபாதைகளை குறைக்க முனைந்தேன்..!

அதன்படி நேற்று ஒரு பல் மருத்துவரை அணுகி, பல்லைப் பிடுங்கிவிடச் சொன்னேன்..! வலி தாங்க முடியவில்லை. மனைவி சொன்ன மருந்தைப் பல நாட்களாகப் போட்டு சமாளித்தாலும், நேற்று வேலைநாள்..! வைத்தியர்கள் வருவார்கள். கண்டிப்பாகக் காட்டவேண்டும் என்று நினைத்து, அவ்வாறே செய்து முடிக்க முனைந்தேன்.

ஆனால் வைத்தியர், பல்லில் சூத்தை இருக்கின்றது என்றாலும், தற்காலிகமாக அடைத்துப் பார்த்துவிட்டு, பிரச்சனையில்லை என்றால், நிரந்தரமாக அடைக்கலாம் என்றும், பல்லைப் பிடுங்கத்தேவையில்லை என்பதை, மருத்துவ ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் சொன்னார்..! எனக்கும் சரியென்று பட்டதால் ஆம் என்று தலையாட்டி, குறித்த பல்லைத் தற்காலிகமாக அடைத்தேன். அந்த செயற்பாட்டின் போது, அதீத வலி ஏற்பட்டது..! பொறுத்துக்கொண்டேன். பின்னர் பல மாத்திரைகள் தந்தார். சாப்பாட்டிற்கு முன் மற்றும் பின்னுக்கும் போடச்சொன்னார். நானும் அவ்வாறே  செய்கின்றேன்.  அடைத்த ஒரு மணி நேரத்திற்கு ஒன்றும் குடிக்க வேண்டாம் என்றார். அதனை கடைப்பிடித்ததுடன், ஒரு பக்கத்தால் உணவு அருந்தினேன். பிள்ளைகள் கேட்டதற்கு இணங்க, செல்வா கொத்து இரவுச்சாப்பாடானது..! எனக்கு சற்று கஷ்டம் என்றாலும் ஒரு பக்கப் பற்களால் மெதுவாகச் சாப்பிட்டேன். அத்துடன் சுன்னாகம் காகிள்ஸில் மேலும் சில தேவையான பொருட்களையும் வாங்கி வைத்தேன்.

பல் அடைத்து இருந்தாலும், வலி சற்று குறைந்து இருந்தாலும், தொடர்ந்து அந்தவலி இருந்துகொண்டே இருந்தது..! கன்னம், நாடி, முரசு தலை எனப்பல இடங்களில் வலி தெரிந்தன..!

லீவுக்கான காரணம், உண்மையாகவே மாறிவிட்டது..!  ஒரு மருத்துவரிடம் போய் பதிந்துவிட்டு, காத்திருக்க மனமில்லாமல் இன்னோர் மருத்துவரிடமும் சென்றேன்..! அங்கும் அதே நிலை என்பதால், முதல் இடத்திலேயே அனைத்தையும் முடித்துக்கொண்டேன்.

 

ஆ.கெ.கோகிலன்

19-09-2024.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!