மனிதம் வெளிவரும் தருணம்..!

 



விலங்குகளாக இருந்த மனிதன், பெற்ற அறிவினாலேயே மனிதத்தன்மை மேலோங்கி பூமியில் அனைத்தையும் ஆளத்தொடங்கினான். ஆசை பேராசையாக மாற சுயநலமாகச் சிந்தித்து, உலகத்தையே பல துண்டுகளாக உடைத்துவிட்டான்.  நாடு, மொழி, இனம், சாதி, மதம் என்று, எவ்வாறு எல்லாம் பிரிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் பிரித்துவிட்டான்..! இன்னும் எது எல்லாம் பிரிபடாமல் இருக்கின்றதோ அவற்றையெல்லாம் பிரிக்கத் தலைப்படுகின்றான்..!

இவ்வாறு பெற்ற அறிவால் பிரிய முற்படும்  மனிதர்களுக்கு  உணர்த்தவே  இயற்கை அழிவுகளைக் கொண்டுவருகின்றது.  அதனைப்புரிந்து, இயற்கைக்கு கேடு செய்யாமல், இயற்கையாய் கிடைப்பதைத் தன்னுடையது என்று உரிமைகொள்ளாமல் எல்லாம் எல்லோருக்குமானது. இன்னும் பொதுவாக, எல்லா உயிர்களுக்குமானது என்ற பொதுநோக்கில் மக்கள் அனைவரும் வரவேண்டும்.  அதற்கான இயற்கையின்பெரு  முயற்சிகளாகத் தான் இவற்றை எனக்குப் பார்க்கத்தோன்றுகின்றது. ஒருவன் கஷ்டத்தில் இருக்கும் போதுதான் மற்றவன் இரங்குகின்றான். அத்துடன் உதவவும் செய்கின்றான். இல்லை என்றால் போட்டிக்கு மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கின்றான்.

துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கமும், அதனால் ஏற்பட்ட பேரவலமும் தற்போது உலக கவனத்தைப் பெற்றுள்ளது.

அந்தவகையில் அங்கிருந்து கிடைக்கப்பெறும் புகைப்படங்கள் யாவும் மக்களை கலங்கடிக்கின்றன.
இடிபாடுகளுக்குள் மாட்டி உயிருடன் இருந்த குழந்தை ஒன்று மீட்கப்படும் காட்சி வெளியாகியிருந்தது.  அக்குழந்தையின்முகத்தையும் உடலையும் பார்க்கும் போது நெஞ்சம் கனத்தது. அனைத்தையும் படைப்பது இயற்கையே..!  அதேபோல் அனைத்தையும் அழிப்பதும் இயற்கையே..! என்ற உண்மை மட்டும் மூளையில் மின்னுகின்றது.



ஆ.கெ.கோகிலன்
08-02-2023.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!