அடுத்த வாழ்க்கை..!

 



சில நாட்கள் வாழ்க்கையில்  திருப்பு முனைகளை ஏற்படுத்தும்..! அந்த வகையில் இன்றைய நாள் எனக்கு ஒரு முக்கிய நாள். ஆம். இன்று தான் அடுத்த ஒரு வாழ்க்கைக்கு இறைவன் வழி விட்ட நாள். இன்று மதியம் எனது இடமாற்றத்திற்கான கடிதத்தை பார்த்து, அதனை உறுதிப்படுத்திக்கொண்டு, மற்றவர்களுக்கும் அனுப்பினேன்.

அத்துடன் நிறைய வேலைகள் முடிக்கவேண்டியிருந்ததால் நிமிர முடியவில்லை. மாலை ஒரு சிறுவர் கழக நிகழ்வில் பேச அழைத்திருந்தார்கள். முதலே நிச்சயப்படுத்திக் கொண்டதால், அதனைத் தவிர்க்க முடியவில்லை. வெறுத்துக்கொண்டே சென்றேன். ஆனால் அங்கு எமது மக்களில் மிகவும் பிரபலமான இரண்டு சாதனைத் தாய்களை கண்டு மிரண்டேன். அவர்களுடன் கதைப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தன.  எனது பேச்சில் அவர்களை வாழ்த்தி, அவர்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க இறைவனை வேண்டியதுடன், அங்குள்ள பிள்ளைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி, அவர்களின் சேவைகளுக்கு மக்களின் சார்பாக நன்றி கூறியதுடன், வருங்காலத்தில் அந்தச்சிறார்கள் சிறந்த மனிதர்களாக வர வாழ்த்தி, எனது உரையை முடித்தேன்.

இரண்டு தாய்களும் எனது பேச்சைப் பாராட்டினார்கள்..! அது மனதிற்கு இதமாக இருந்தது.

இந்நிகழ்விற்காக அரை நாள் லீவு போட்டது மனதிற்கு மிகுந்த நிறைவைத் தந்தாலும் மேலும் சில வேலைகளைக் கிடப்பில் போடவேண்டியதாகப் போய்விட்டது.

மாலை பலர் எனக்குப் போன் எடுத்திருந்தார்கள். அனைவருடனும் கதைக்க முனைந்தேன். சிலரின் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.

நாளையும், நாளை மறுநாளும் சில முடிக்காத வேலைகளைச் செய்யவேண்டிய சூழல் இருக்கின்றது. அவற்றை முடித்துக்கொண்டு, அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, இந்நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறும் அதேவேளை திருகோணமலையில் மீள, புதிதாக ஒரு பணிப்பாளராக இணைகின்றேன்..!

55 வயதில் ஓய்வு என்ற நிலை இருந்தால், இனி நான் வேலை செய்ய முடியாத சூழல் உருவாகியிருக்கும். நல்லவேளை, இன்னும் சிலவருடங்கள் வேலைசெய்ய இறைவன் அனுமதித்தது பெரிய ஆசீர்வாதமாகப் பார்க்கின்றேன்.

மாலை மனைவி பிள்ளைகளுடன், எவ்வாறு இனிவரும் நாட்களைச் சமாளிக்க வேண்டும் என்பதைக் கதைத்து, அவர்களுக்கு மேலும் தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுத்தேன்.

இறைவன்  பெரியவன்..! அனைத்தையும் அறிந்தவன்..!

அன்பும் நிறைந்தவன்..!

உண்மையை மதிப்பவன்..!

நன்மையை நிச்சயம் தருவான்..!

 

ஆ.கெ.கோகிலன்

29-12-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!